Skip to content

4. இளைஞர்களுக்கு விசேஷித்த கட்டளைகள்

இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்
ஜெ.சி.ரைல் (1816-1900), Translation into Tamil by VS

4. இளைஞர்களுக்குரிய விசேμத்த கட்டளைகள்

கடைசியாக நான் இளைஞர்களுக்கென சில விசேμத்த கட்டளைகளை உங்கள் முன் வைக்கிறேன். இவற்றை எல்லா இளைஞர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென புத்திசொல்லுகிறேன்

i) பாவம் என்று உணருகிற எதையும் விட்டு உடனடியாக விலக முடிவு செய்துகொள்.

இளைஞர்கள் கடவுளின் உதவியைக் கொண்டு, எவ்வளவு சிறிய பாவமாக இருந்தாலும் அதை விட்டு விலக உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும்.

இளைஞர்களே, உங்கள் இருதயத்தை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள். கடவுளின் பார்வையில் தவறாகத் தெரிகின்ற ஏதாவதொரு பழக்கமோ, செயல்பாடோ உங்களிடத்தில் இருப்பது தெரிகிறதா? அப்படி இருப்பது தெரிந்த உடனே, அதைத் தகர்த்துப் போடுவதற்கு ஒரு நிமிடமும் தாமதம் செய்யாதிருங்கள். அதை விலக்கிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

விட்டு வைக்கப்படும் பாவங்கள்தான் மனதைக் குருடாக்கிப் போடுகிறது. மனசாட்சியையும் செத்துப் போகச் செய்கிறது. அது எவ்வளவு சிறிய பாவமாக இருந்தாலும் ஆபத்தானதுதான். ஒரு பெரிய கப்பலைக் கவிழ்க்க அதில் இருக்கும் ஒரு சிறிய துளையே போதுமானதாக இருக்கிறது. பெரிய நெருப்பை உண்டாக்குவதற்கு ஒரு சிறு பொறி போதும். அது போலவே விட்டு வைக்கப்பட்டிருக்கின்ற சிறிய பாவமானது ஆத்துமாவையே அழிக்கக் கூடியதாயிருக்கிறது. ஆகவே என்னுடைய புத்திமதியைக் கேளுங்கள். சிறிய பாவமானாலும் அதை விட்டு வைக்காதீர்கள். கானானியரை பெரியோர், சிறியோர் ஒருவர் விடாமல் அழித்துப் போடும்படி கர்த்தர் கட்டளையிட்டார். அதே கொள்கையை பாவத்திலும் காண்பியுங்கள். சிறிய பாவந்தானே என இரக்கப்பட்டு விட்டுவிடாதீர்கள். உன்னதப்பாட்டிலே சாலமோன் அருமையாக சொல்லுகிறார்: “திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறு நரிகளையும் பிடியுங்கள்”(உன் 2:15).

எந்தவொரு பயங்கரமான பாவியும் ஆரம்பத்தில் அவ்வளவு பயங்கரமானவனாக இருந்திருக்க மாட்டான். ஆரம்பத்தில் கொஞ்சம்தான் மீறிப் போயிருப்பான். அது அவனை இன்னும் அதிகமாக கேடு செய்யும்படிக்கு தூண்டியிருக்கும். இப்படியே காலம் செல்லச் செல்ல அவன் அதிக கொடுமையானவனாக மாறியிருப்பான். ஆசகேல் என்பவன் இப்படித்தான் மாறிப்போனான் என்பதை வேதத்தில் காண்கிறோம். தேவனுடைய மனுஷனாகிய எலிசா, இந்த ஆசகேல் எதிர்காலத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு என்னவிதமான பயங்கரத் தீங்கை செய்வான் என்பதை அவனிடம் சொன்னபோது அச்சமயத்தில் அவனால் அதை நம்பவே முடியவில்லை. “இத்தனை பெரிய காரியத்தை செய்ய செத்த நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான்” (2ராஜா 8:13). ஆனால் அவன் பாவத்தை தனது இருதயத்திலே வளர விட்டபடியினாலே முடிவிலே அவன் எலிசா சொன்னது மாதிரியேதான் செய்தான்.

வாலிபரே, பாவத்தை அதன் ஆரம்பத்திலேயே எதிர்த்து நில்லுங்கள். அது சிறியதாகத் தோன்றலாம். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்பீர்கள். ஆனால் நான் சொல்லுவதைக் கேளுங்கள் − அதற்கு எதிர்த்து நில்லுங்கள். அதற்கு ஒருபோதும் ஒத்துப் போகாதிருங்கள். எந்த பாவமும் நுழைவது தெரியாமல் உங்கள் இருதயத்துக்குள் புகுந்துவிட வாய்ப்பளிக்காதிருங்கள். ஒரு ஊசியின் முனை எவ்வளவு சிறியது. ஆனால் அது ஏற்படுத்துகின்ற சிறிய துளையின் வழியாக மிக நீளமான நூலையே இழுத்துவிடுகிறதல்லவா? “கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?” (1கொரி 5:6)என்று அப்போஸ்தலனாகிய பவுல் கேட்கும் கேள்வியை மனதில் வையுங்கள். paraஉலகில் முன்னேறாத மனிதர்களைக் கேட்டீர்களானால் அவர்கள் நான் கூறுவதைத்தான் கூறுவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, பாவத்திற்கு ஆரம்பத்திலே இடங்கொடுத்தபடியினால்தான் தங்கள் வாழ்க்கையை தாங்களே அழித்துக் கொண்டதான நிலை ஏற்பட்டது என்பதைக் கூறுவார்கள். ஆரம்ப நாட்களில் சிறிய விஷயங்களில் பொய்யராயும், உண்மையற்றோராயும் இருந்தனர். அதிலேயே வளர்ந்தனர். படிப்படியாக மோசமான நிலைமையிலிருந்து மேலும் மேலும் மோசமான நிலையை நோக்கி முன்னேறினர். தாங்கள் செய்வோம் என கனவிலும் நினைத்திராத காரியங்களை செய்யத் துவங்கினர். முடிவில் அவர்கள் தங்களுடைய மானம் மரியாதையை இழந்தனர். குணத்தை இழந்தனர். மனசமாதானம் போயிற்று. முடிவில் தங்கள் ஆத்துமாவையே இழந்து போயினர். சுவற்றிலே போடும் சிறிய துளையைப் போல தங்கள் மனசாட்சியில் பாவத்திற்கு இடங்கொடுத்தனர். சிறிய துளை பெரிய விரிசலாகி, சுவரையே தகர்த்துப் போட்டது போல அவர்களது பாவமும் அவர்கள் மனசாட்சியை செத்துப் போகப் பண்ணிவிட்டது. அது ஆத்தும அழிவுக்குக் காரணமாகிவிட்டது. உண்மையாக நடந்து கொள்வதிலும், நேர்மையாக நடந்து கொள்வதிலும் இவைகளை நினைத்து கடைப்பிடியுங்கள். சிறிய விஷயமானாலும் மனசாட்சிக்கு விரோதமாக நடக்காதிருங்கள். “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” (லூக் 16:10). உலகம் என்ன கூறினாலும் சிறிய பாவம் என்று ஒன்றுமில்லை. பெரிய கட்டிடங்கள் யாவும் சிறிய செங்கல்கள் சேர்ந்து கட்டப்பட்டவைதானே. முதலாவது வைக்கிற கல்லும் மற்ற எல்லா கற்களைப் போலவும் முக்கியமானதே. எல்லா பழக்கவழக்கங்களும் தொடர்ந்து செய்கின்ற சிறிய பழக்கவழக்கங்களால் உருவானவைகளே. சிறு வயதில் ஒரு கதை படித்திருப்பீர்கள். ஒரு கோடாரியானது காட்டிலே உள்ள எல்லா மரங்களிடமும், தனது கைப்பிடிக்காக ஒரு சிறிய மரத்துண்டைத் தரும்படி கெஞ்சிக் கேட்டது. அப்படி கொடுத்துவிட்டால், பிறகு அவர்களை தொந்தரவு செய்யாமலிருப்பதாக வாக்குறுதி அளித்தது. கடைசியில் ஏதோ ஒரு மரம் அதற்கு இணங்கி ஒரு மரத்துண்டைக் கொடுத்தது. அதன்பின் என்ன நடந்திருக்கும்? அந்தக் கோடாரியானது காட்டிலுள்ள அனைத்து மரங்களையும் வெட்டத் தொடங்கி, முடிவில் காட்டையே அழித்துப் போட்டது. சாத்தான் உங்கள் இருதயத்தில் ஒரு சிறிய பாவத்திற்கு மட்டுந்தான் இடம் கேட்பான். கொஞ்சம் இடம்கிடைத்தால் போதும். சிறிதுசிறிதாக உங்கள் இருதயம் முழுவதையும் ஆக்ரமிப்பு செய்துவிடுவான். நமக்கும் கடவுளுக்கும் இடையே எந்த சிறிய பாவத்தையும் வரவிடக் கூடாது.

சறுக்கலான இடத்தின் உச்சியிலிருந்து இரண்டு விதங்களில் கீழே வரலாம். ஒரேயடியாக சறுக்கிக் கொண்டும் வந்துவிடலாம். அல்லது, படிப்படியாக சறுக்கி வரலாம். அதுபோல, தெரிந்தே நரகத்தின் வழியில் சில பேர் துணிந்து போவார்கள். ஆனால் அநேகர் தங்கள் பாவங்களை உணராதவர்களாக படிப்படியாக நரகவழியிலே போவார்கள். அது மிகவும் பரிதாபகரமானது. சிறிய பாவங்களை அனுமதித்தீர்களானால், அது மற்ற பெரிய பாவங்களையும் விரும்பச் செய்யும். ஒரு புறமதஸ்தனாகிய ரோம கவிஞனே : “யாரால் ஒரு பாவத்தோடு நிறுத்த முடியும்?” என்று கேட்கிறான். ஆண்டுகள் செல்லச் செல்ல பாவமானது அதிகரித்துக் கொண்டே போகும். ஜெரமி டெய்லர்(ஒங்ழ்ங்ம்ஹ் பஹண்ப்ர்ழ்) என்பவர் பாவம் எப்படிப் படிப்படியாக முன்னேறுகிறது என்பதைக் கூறுகிறார்: “முதலில் அது அவனை திடுக்கிடச் செய்கிறது. பிறகு அது அவனுக்கு இன்பமாக இருக்கிறது. பிறகு சுலபமாக செய்ய முடிகிறது. அது அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. அடிக்கடி செய்யத் தூண்டுகிறது. பிறகு அது பழக்கமாகவே ஆகிவிடுகிறது. அவனில் அது உறுதிப்பட்டுவிடுகிறது − பிறகு அவன் கல்நெஞ்சனாகி விடுகிறான். பிடிவாதமுள்ளவனாகிறான். மனந்திரும்பவே கூடாது என தீர்மானித்துக் கொள்கிறான். அத்தோடு அவன் அழிந்து போகிறான்”

இளைஞனே, நீ இந்தவித நிலைமைக்கு வராதபடிக்கு நான் கூறியிருக்கிற கட்டளையைக் கைக்கொள். அதாவது, எந்தப் பாவமாக இருந்தாலும் அதை விட்டு வைக்காமல் அடியோடு அழித்து விடுகிற உறுதி கொள்.

ii) பாவத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கிற யாவற்றையும் விட்டு ஓடிவிலகத் தீர்மானித்துக் கொள்

இளைஞர்கள் கடவுளின் உதவியைக் கொண்டு, பாவத்திற்கு சாதகமான சந்தர்ப்பங்களை விட்டு விலகியோட வேண்டும்.

“தீமையில் அகப்பட்டுக் கொள்ளாமலிருக்க விரும்புகிறவன் அதற்கான சந்தர்ப்பங்களை தவிர்க்க வேண்டும்” என்று தூய்மைவாதியாகிய பிஷப் ஹால்(ஏஹப்ப்) என்பவர் கூறினார். ஒரு சிறிய கதையுண்டு. ஒரு பட்டாம்பூச்சி, ஆந்தையைப் பார்த்துக் கேட்டதாம்: நெருப்பில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிப்பது எப்படியென்று. அதற்கு ஆந்தை, புகைந்து கொண்டிருக்கிற இடத்தின் அருகேகூட போகாதே என்று கூறியதாம். பாவம் செய்யக்கூடாது என்று நாம் தீர்மானம் எடுத்துக் கொள்வதுகூட போதாது. அதற்கு வழி உண்டாக்குகிற சகல காரியங்களிலிருந்தும் வெகுதூரம் விலகி இருக்க வேண்டும். பின்வரும் விதங்களில் நம்மை தற்சோதனை செய்து கொண்டேயிருக்க வேண்டும் − நமது நேரத்தை எப்படி செலவிடுகிறோம்? நாம் என்ன மாதிரியான புத்தகங்களை வாசிக்கிறோம்? எந்தவித குடும்பங்களிடம் நாம் செல்லுகிறோம்? நாம் போகிறதான சமூக சூழ்நிலைகள் என்ன? நான் செய்கிற காரியங்களிலும், செல்லுகிற இடங்களிலும் தவறு ஒன்றும் காணப்படவில்லை என்று கூறிக் கொள்வது மாத்திரம் போதாது. நான் பாவத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் இவைகளின் மூலமாக ஏற்படுமோ என்பதை ஆராய்ந்து பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

சோம்பலாக இருப்பதுகூட மறைமுகமாக பாவத்திற்கு வழிவகுக்கிறது என்பதை மறக்கக்கூடாது. ஒன்றுமே செய்யாமல் இருப்பதை பாவம் எனக் கூறவில்லை. ஆனால் அது பொல்லாத சிந்தனைகளுக்கும், வீணான கற்பனைகளுக்கும் வழிவகுத்துக் கொடுக்கிறது. சாத்தான் அசுத்தமான விதைகளைத் தூவுவதற்கு சோம்பல்தனம் ஏதுவாகிவிடுகிறது. அதற்குத்தான் நாம் பயப்பட வேண்டும். எருசலேமில் தனது வீட்டின் மேலே தாவீது வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தது சாத்தானுக்கு சாதகமாக அமைந்து விட்டது. அப்படி தாவீது நேரத்தை கழித்துப் போடாமலிருந்தால், பத்சேபாளைக் கண்டிருக்கவும் மாட்டார். உரியாவைக் கொலை செய்திருக்கவும் மாட்டார் அல்லவா?

மறைமுகமாக பாவத்தை உண்டாக்குவதில் உலக களியாட்டுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை. அப்படி சொல்வது கடினம்தான். வேதத்தின்பிரகாரமாக அவைகளைத் தவறென்று சிலநேரங்களில் சொல்லக்கூடாமல் இருக்கலாம். ஆனால் அவைகளின் நோக்கமானது முடிவில் ஆத்துமாவைக் காயப்படுத்தக் கூடியதாயிருக்கிறது. உலகப்பிரகாரமானதும், உணர்ச்சிகளைத் தூண்டுவதுமான விதைகளை அவை விதைக்கின்றன. விசுவாச வாழ்க்கையோடு அவை மோதுகின்றன. ஆரோக்கியமற்ற, இயற்கைக்கடுத்த உள்ளக்கிளர்ச்சியை விரும்பித் தேடச் செய்கின்றன. மாம்சத்தின் இச்சைக்கும், கண்களின் இச்சைக்கும், ஜீவனத்தின் பெருமைக்கும் அவை நம்மை அடிபணியச் செய்கின்றன(1யோவா 2:16). மோட்சத்தையும், நித்தியவாழ்வையும் நம் மனதில் மங்கிப் போகச் செய்து, இவ்வுலக வாழ்க்கையை பிரகாசமாகத் தோன்றச் செய்கின்றன. தனி ஜெபத்தையும், வசனங்களை தியானித்தலையும், கடவுளோடு தொடர்பு கொள்ளுவதையும் இருதயத்திலிருந்து அகற்றிப் போட்டு, அவைகளை வெறுக்கும்படி தூண்டுகின்றன. அவைகளில் ஈடுபடுகிற மனிதன் சாத்தானுக்கு இடங்கொடுக்கிறவனாயிருக்கிறான். அவன் போராட வேண்டிய போராட்டத்தை விட்டுவிட்டு, தனது நடக்கைகளின் மூலமாக சாத்தானுக்கு பல அனுகூலங்களை ஏற்படுத்தித் தருகிறான். அதன் காரணமாக அவன் அடிக்கடி தோற்றுப் போவதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டுமோ!

வாலிபரே, உங்கள் ஆத்துமாவைத் தாக்குகிற எந்தக் காரியம் உங்களில் இருந்தாலும் அதைக் களைந்து போடுவதற்குத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருங்கள். சாத்தான் உங்களுக்குள் வேலை செய்வதற்கு நீங்கள் உதவாதீர்கள். நீங்கள் ரொம்பவுந்தான் ஜாக்கிரதையாயிருக்க முயற்சிக்கிறீர்கள் என்று ஜனங்கள் சொல்லுவார்கள். எல்லாவற்றிலும் தேவைக்கு மேல் கவனம் செலுத்துகிறீர்கள் என்பார்கள். அப்படி இருப்பதால் என்ன தீமை? அவர்கள் சொல்லுவதை பொருட்படுத்தாதீர்கள். கூர்மையான ஆயுதங்களோடு விளையாடுவது எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட ஆபத்தானது ஆத்துமத்துக்கடுத்த காரியங்களில் கவனக்குறைவாக இருப்பது. பாதுகாக்கப்பட விரும்புகிறவன் ஆபத்துகளின் அருகில் செல்லக் கூடாது. வெடிமருந்துக் கிடங்கில் ஒரு சிறு பொறி கங்கு விழுந்தாலும் தீப்பற்றிக் கொள்வதைப் போன்ற ஆபத்தான நிலையிலுள்ளதாகக் கருதி தனது இருதயத்தை அவன் பாதுகாக்க வேண்டும். ஒரு சிறு சோதனைகூட அவன் ஆத்துமாவுக்கு ஆபத்தைக் கொண்டு வந்துவிடும்.

“எங்களை சோதனைக்குட் பிரவேசிக்கப் பண்ணாதிரும்”(மத் 6:13) என்று ஜெபிக்கிறீர்களே. நீங்களே சோதனைக்குள் பிரவேசிக்கிறவர்களாக இருந்து கொண்டு அப்படி ஜெபிப்பதால் என்ன பிரயோஜனம்? “தீமையிலிருந்து இரட்சித்துக் கொள்ளும்” என்கிறீர்கள். தீமையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டியதான விருப்பம் உங்களுக்கு இருப்பதை செயலில் காண்பிக்கிறீர்களா? யோசேப்பின் முன்மாதிரியைப் பாருங்கள். அவனுடைய எஜமானின் மனைவி அவனைப் பாவம் செய்யத் தூண்டினாள். அவன் அதற்கு மறுப்புத் தெரிவித்தது மாத்திரமல்ல, அவள் இருக்கும் இடத்திலே செல்லுவதையே தவிர்த்தான் என்கிறதைக் காண்கிறோமல்லவா? “. . . அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை” (ஆதி 39:10). சாலமோன் சொல்வது போல, “துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே. தீயோருடைய வழியிலே நடவாதே” அது மாத்திரமல்ல, “அதை வெறுத்து விடு. அதின் வழியாய்ப் போகாதே. அதை விட்டு விலகி, கடந்து போ“(நீதி 4:14−15). குடிகாரனாக ஆகிவிடக் கூடாது என நினைப்பது மாத்திரமல்ல, மதுபானத்தை ” . . இரத்தவண்ணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும் அதை நீ பாராதே” (நீதி 23:31) என்று எச்சரிக்கிறார். இஸ்ரவேலிலே நசரேய விரதம் இருப்பவர்கள் திராட்சைரசத்தைப் பானம் பண்ணாமலிருப்பது மாத்திரமல்ல, திராட்சையினால் செய்யப்பட்ட எந்தப் பதார்த்தத்தையும் விலக்கி விட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருந்தது. தீமையை செய்யாதீர்கள் என்று கூறாமல் பவுல் ஒரு படி மேலே போய், “தீமையை வெறுத்து” விடுங்கள் என்கிறார்(ரோம 12:9). “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடு” என்று தீமோத்தேயுவுக்கு புத்தி சொல்லுகிறார். இந்த மாதிரியான எச்சரிப்புகள் எவ்வளவு தேவையாக இருக்கிறது! தீனாள், பக்தியற்ற சீகேமிய தேசத்தின் பெண்களைப் பார்த்து வரப் புறப்பட்டதினால் தனக்கு மிகுந்த பொல்லாப்பை வருவித்துக் கொண்டாள். லோத்து பொல்லாதவர்களாகிய சோதோம் குடிகளின் அருகில் தனது கூடாரத்தைப் போட்டதால், தனது உயிரைத் தவிர யாவையும் இழந்து போனான்.

இளைஞர்களே, எச்சரிப்பாயிருங்கள். சாத்தானை உங்கள் ஆத்துமாவுக்கு மிக அருகில் வரவிட்டு விட்டு பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணாதீர்கள். உங்களைத் தொட முடியாத தொலைவிலேயே அவன் நிற்கட்டும். சோதனைகளை தூரத்திலேயே கண்டு உணர்ந்து கொள்ளுங்கள். அது பாவம் உருவாவதை தவிர்க்கும்.

iii) கடவுளின் கண்கள் நோக்கிக் கொண்டிருப்பதை மறவாதே

இளைஞர்கள் கடவுளின் கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதை ஒருபோதும் மறக்காமலிருக்க தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடவுளின் கண்கள்! அதை சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லா இடத்திலும், எல்லா வீட்டிலும், எந்த மைதானத்திலும், எந்த அறையிலும், யாரோடு இருந்தாலும், தனியாக இருந்தாலும், கூட்டத்தில் இருந்தாலும் கடவுளின் கண்கள் எப்போதும் உன்னை நோக்கிக் கொண்டேயிருக்கின்றன. “கர்த்தருடைய கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது“(நீதி 15:3). அந்தக் கண்கள் இருதயத்தையும் பார்க்கும், செயல்களையும் பார்க்கும்.

இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறதான கடவுளோடு நீங்கள் சம்பந்தமுடையவர்களாய் இருக்கிறீர்கள். அவர் ஒரு போதும் உறங்குகிறதுமில்லை, தூங்குகிறதுமில்லை(சங் 121:4). உங்களுடைய நினைவுகளையும் தூரத்திலிருந்து அறிகிறவர்(சங் 139:2); அவருக்கு முன்பாக இரவும் பகலைப் போல வெளிச்சமாக இருக்கும்(சங் 139:12); கெட்ட குமாரனைப் போன்று நீங்கள் உங்கள் தகப்பன் வீட்டை விட்டு தூரதேசத்திற்கு போய்விட்டால் யாரும் உங்கள் நடத்தையைக் கண்காணிக்க மாட்டார்கள் என எண்ணிக் கொள்ளலாம்(லூக் 15:13). ஆனால் தேவனுடைய காதுகளும், கண்களும் அங்கேயும் இருக்கின்றன. நீங்கள் உங்கள் பெற்றோரை ஏமாற்றலாம்; உங்கள் மேலதிகாரியை ஏமாற்றலாம். அவர்களிடம் பொய்களைக் கூறலாம். அவர்களுக்கு முன்பாக ஒருவிதமாகவும், அவர்கள் அறியாமல் வேறுவிதமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் கடவுளை உங்களால் ஒருபோதும் ஏமாற்றவே முடியாது. உங்களை அவர் முற்றிலுமாக அறிந்திருக்கிறார். நீங்கள் சொல்லுகிற வார்த்தையெல்லாம் அவருக்குக் கேட்கிறது. இந்த நிமிடத்திலே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் அவர் அறிவார். நீங்கள் இரகசியமாக செய்த பாவங்களை அவர் தமது முகத்துக்கு முன்பாக வைத்திருக்கிறார். அவைகளை ஒரு நாளிலே உலகம் அறியத்தக்கவிதமாக வெளிப்படுத்துவார். அப்போது உங்களுக்கு மிகுந்த அவமானம் உண்டாகும். “இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்“(1கொரி 4:5). நீங்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அதுதான் நடக்கும்.

இதை உணர்ந்திருப்பவர்கள் மிகவும் கொஞ்சமே. தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரிந்திருந்தால் மனிதர்கள் தங்கள் பாவங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்களா? வெளிச்சத்திற்கு வராமல் கற்பனையிலேயே எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன! ஆம், மனிதர்கள் தனிமையிலே பலவித கற்பனைகளுக்கு இடமளிக்கிறார்கள்; தனிமையிலே பலவித வார்த்தைகளைப் பேசுகிறார்கள்; தனிமையில் பலவித செயல்களைப் புரிகிறார்கள். அவைகளையெல்லாம் உலகத்தாருக்கு முன்பாக வெளிப்படுத்திக் காண்பித்தால் வெட்கப்பட்டுப் போவார்கள். யாரோ வருகிற சத்தம் கேட்டு எத்தனையோ பேர் தங்கள் பொல்லாத நடவடிக்கையை நிறுத்தியிருக்கிறார்கள். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, தாங்கள் செய்ய நினைத்ததைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இது என்ன முட்டாள்தனம்! நாம் எங்கே போனாலும், என்ன செய்தாலும் கவனித்துக் கொண்டிருக்கிற ஒருவர் இருக்கிறார். கதவைப் பூட்டினாலும், திரைச்சீலைகளை இழுத்துவிட்டாலும், ஜன்னல்களை அடைத்துக் கொண்டாலும், விளக்கை அணைத்துவிட்டாலும் அவருக்கு அதெல்லாம் பெரிய விஷயமில்லை. இவைகளால் அவர் பார்ப்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். நீங்கள் அவரை வெளியே தள்ளி கதவை அடைக்க முடியாது. அவர் பார்ப்பதைத் தடுக்க முடியாது. “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும் இருக்கிறது“(எபி 4:13). யோசேப்பு இதை நன்றாக உணர்ந்திருந்தார். எஜமானனின் மனைவி பாவம் செய்யத் தூண்டியபோது இதை நன்கு அறிந்திருந்தபடியால் யோசோப்பு அதற்கு உடன்படவில்லை. அன்றைக்கு அவர்களைக் காண அந்த வீட்டிலே ஒருவரும் இல்லை. மனிதர்கள் யாரும் கண்டுவிடாதபடியான சூழ்நிலை அப்போது இருந்தது. கண்களுக்குப் புலப்படாத தேவன் அங்கும் இருக்கிறார் என்பதை உணர்ந்தவராக யோசேப்பு தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். ஆகவேதான் தன் எஜமானனின் மனைவியிடம், “. நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி?” என்று யோசேப்பால் சொல்ல முடிந்தது.

இளைஞர்களே, நீங்கள் அனைவரும் 139ஆம் சங்கீதத்தை மனப்பாடமாகப் படித்து வைத்துக் கொள்ளும்படி புத்தி கூறுகிறேன். நீங்கள் உலகில் செய்கின்ற சகல காரியங்களிலும், “கடவுள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது நினைவில் இருக்கிறதா?” என்கிற கேள்வியைக் கேட்டுகே கொண்டு உங்களையே ஆராய்ந்து பாருங்கள்.

கடவுளின் பார்வையிலே வாழுங்கள். ஆபிரகாம் அப்படித்தான் வாழ்ந்தார். அவர் தேவனுக்கு முன்பாக உத்தமமாக நடந்தார். ஏனோக்கும் அப்படியே வாழ்ந்தார். அவர் தேவனோடே சஞ்சரித்தார். மோட்சமும் அப்படித்தான் இருக்கும். அவருடைய பிரசன்னம் மோட்சத்தில் நித்தியமாக நிறைந்திருக்கும். கடவுள் பார்த்துவிடக்கூடாது என்று நீங்கள் நினைக்கிற எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள். கடவுளுக்குக் கேட்டுவிடக்கூடாது என்று நினைக்கிற எந்த வார்த்தையையும் பேசாதீர்கள். கடவுள் படித்துவிடக்கூடாது என நினைக்கின்ற எதையும் எழுதாதீர்கள். கடவுள் உங்களைப் பார்க்கக்கூடாது என நினைக்கின்ற இடங்களுக்குப் போகாதீர்கள். “எங்கே, நீ என்ன புத்தகத்தைப் படிக்கிறாய். காண்பி” என்று கடவுள் கேட்டுவிடக் கூடாது என நினைக்கின்ற புத்தகத்தைப் படிக்காதீர்கள். “நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கடவுள் கேட்டுவிடுவாரோ என அஞ்சுகின்ற காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடாதீர்கள்.

iv) கடவுளின் பொதுவான கிருபைகளை உபயோகித்துக் கொள்ளத் தீவிரமாயிரு

இளைஞர்கள் கிருபையின் சாதனங்களை பயன்படுத்துவதில் அதிக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிருபையின் சாதனங்கள்
ஜெபத்திற்கும், பிரசங்கத்திற்குமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிற கடவுளின் வீட்டிற்கு தவறாமல் செல். அப்படி செல்வது உன் கையில்தான் இருக்கிறது. கர்த்தருடைய நாளை பரிசுத்தமாக ஆசரிப்பதைத் தவறாமல் கடைப்பிடி. உனக்கு நாட்களை அருளிச் செய்திருக்கிறார் தேவன். ஏழுநாளில் ஒரு நாளை அவருக்காக செலவிடுவதே சரியானதென்று தீர்மானித்துக் கொள்.

இதைக் குறித்து நீங்கள் தவறான அபிப்ராயம் கொண்டுவிடாதபடிக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சபைக்கு ஒழுங்காக சென்றுவிட்டால் ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் போதுமானது என்று நான் கூறுவதாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். நான் அப்படிக் கூறவில்லை. பாரம்பரியங்களைக் கைக் கொண்டுவந்த பரிசேயரைப் போல நீங்கள் ஆக வேண்டுமென கூறவில்லை. வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளிலே, குறிப்பிட்ட நேரத்திலே, உங்கள் சரீரத்தை கர்த்தருடைய ஆலயத்திற்குக் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டால் நீங்கள் மெய்யான கிறிஸ்தவர்கள் என்றும், கர்த்தரை சந்திக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்றும் நான் கூறுவதாக நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் கூறுவேன். இருதயத்திலிருந்து ஏறெடுக்கப்படாத எந்த ஆராதனையும் பிரயோஜனமற்ற வீணான காரியம் ஆகும். உண்மையான ஆராதனை எப்படியிருக்கும் தெரியுமா? “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்” (யோவா 4:23).

அதே சமயத்தில் கிருபையின் சாதனங்கள் ஒருவனுக்கு இரட்சிப்பை அளிக்காது என்பதால் அவைகளை அலட்சியப்படுத்தி விடவுங்கூடாது. தங்கம் சாப்பிடும் பொருள் அல்ல. அதனால் அதை உபயோகமற்றது எனக்கூறி தூர எறிந்து விடமாட்டீர்கள் அல்லவா! உங்களுடைய ஆத்துமா நித்தியமாக வாழ்வதற்கு அது கிருபையின் சாதனங்களை சார்ந்து இருக்கவில்லை என்பதற்காக அவைகளை அலட்சியப்படுத்த முடியாது. உங்கள் ஆத்துமாவின் நன்மைகளுக்காகவே கிருபையின் சாதனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவைகளில்லாமல் உங்கள் ஆத்துமா நலன் பெற முடியாது. எலியா தீர்க்கதரிசியை அக்கினிமயமான இரதங்களில் மோட்சத்திற்குக் கூட்டிச் சென்றது போல இரட்சிக்கப்பட்டிருக்கிற எல்லாரையும் தேவன் கூட்டிக் கொண்டு போக முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவதில்லை. எல்லாரும் வேதத்தைப் படிப்பதற்கும், தங்களைக் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்கும் அவசியம் இல்லாதபடி செய்து, ஒவ்வொருவரையும் தனித்தனியே கனவுகளின் மூலமாகவும், தீர்க்கதரிசனங்கள், அற்புதங்கள் மூலமாகவும் போதித்து வழிநடத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படியும் செய்ய சித்தங்கொள்ளவில்லை. ஏன் அவர் அப்படி செய்யவில்லை? ஏனென்றால் அவர் சில வழிமுறைகள் / சாதனங்கள் மூலமாக செயல்படுகின்ற கடவுள். அவரோடு தொடர்பு கொள்ளுகிற அனைவரும் கிருபையின் சாதனங்களின் வழியாகவே அவரை அணுக வேண்டுமென்பது அவருடைய சித்தமும் கட்டளையுமாயிருக்கிறது. ஏணி அல்லது சாரம் போன்றவைகள் இல்லாமல் ஒருவனும் உயரமான கட்டடங்களைக் கட்டுவதற்குத் துணியமாட்டான். அவ்வித சாதனங்கள் இல்லாமல் கட்டிவிடலாம் என நினைப்பவன் முட்டாளாகத்தான் இருக்க முடியும். அது போல அறிவுள்ளவன் எவனும் இந்தக் கிருபையின் சாதனங்களை அலட்சியப்படுத்த மாட்டான்.

இவைகளைக் குறித்து நான் அதிகமாக சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், அவையொன்றும் அவசியமல்ல எனக்கூறி தனது வாதங்களால் உங்கள் இருதயத்தை நிரப்புவதற்கு சாத்தான் கடுமையாக உழைப்பான் என்பதை அறிந்திருக்கிறேன். பலவிதமான வாதங்களை உங்களுக்கு முன்பாக வைப்பான். சபைக்கு ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தும் அதனால் பயனைப் பெறாத அநேக மக்களைக் காண்பித்து, அங்கு போவதால் என்ன பயன் என கூறுவான். “பார், இந்த மக்களை. சபைக்குப் போகிறவர்களும் போகாதவர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே சபைக்கு போவதில் ஒரு பலனும் இல்லை” என்று உங்கள் காதுகளில் இரகசியமாகக் கூறுவான். இது ஒரு சரியான வாதமா? ஒரு நல்ல காரியத்தை சிலர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்காக அந்த காரியம் நல்லதல்லவென்று ஆகிவிடுமா? கிருபையின் சாதனங்களை பலர் உபயோகித்தும் பலன் பெறவில்லை என்பதற்காக அவை சரியல்ல என்பது அவைகளை விளங்கிக் கொள்ளாததால் வருகிற கோளாறு. அநேகம் பேர் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குணமடையவில்லை என்பதற்காக மருந்துகளையே வேண்டாம் எனத் தள்ளுவது போல இருக்கிறது இது. அநேகம் பேர் சாப்பாடு சாப்பிட்டும் தங்களுடைய தவறுதலான உணவுப்பழக்கங்களினாலே பலவிதமான வியாதிகளை வருவித்துக் கொள்வதைக் காண்கிறோம். ஆகவே எல்லாரும் சாப்பாடே வேண்டாம் எனத் தவிர்த்து விடுவார்களா? எதையும் சரியான விதத்தில் உபயோகித்தால் அதற்குரிய பலனைப் பெறலாம். அது போலவே கிருபையின் சாதனங்களை நாம் எப்படி, எந்தவிதமான மனநிலையோடு உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்து அது மிகுந்த பலன்களைக் கொடுக்கும்.

சுவிசேஷப் பிரசங்கம்
இதிலும் நான் அநேக காரியங்களை சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு இளைஞனும் தவறாமல் பிரசங்கங்களைக் கேட்க வேண்டுமென நான் உறுதியாக நம்புகிறேன். இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் கூறுவதற்கு போதுமான வார்த்தைகள் இல்லை. கடவுளின் ஆசீர்வாதமானது, இவ்வித பிரசங்கங்களின் மூலமாக உங்களை வந்து அடையும். அது உங்களுடைய ஆத்துமாவையே மாற்றலாம். கிறிஸ்துவை அறிகிறதான இரட்சிப்பின் விசுவாசத்திற்குள் உங்களை நடத்திச் செல்லலாம். வார்த்தையிலும் செயலிலும் கடவுளின் பிள்ளைகளாக இருக்கும்படியாக உங்களை வழிநடத்தலாம். நித்தியமான நன்றியறிதல் ஏற்பட அது காரணமாயிருக்கலாம். பரலோகத்தின் தூதர்களும் சந்தோஷப்படும்படியான நிலையை ஏற்படுத்தலாம். இவை ஏதும் ஏற்படவில்லையென்றால்கூட, இளைஞர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கக் கூடிய வல்லமையானது இவ்வித பிரசங்கங்களின் மூலமாக ஏற்படுகிறது என்பதை நான் நம்புகிறேன். கடவுளின் ஆதிக்கம் இருக்கின்றதான இவ்வித பிரசங்கங்களை இளைஞர்கள் தவறாமல் கேட்கும்படியாக நான் வலியுறுத்துகிறேன். பிரசங்கங்கள், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை தவறான பாதையில் போகவிடமால் தடுத்திருக்கிறது. கடவுளிடம் அவர்கள் முற்றிலுமாக வரவில்லையென்றாலும், தீமைக்கு அவர்களை விலக்கிக் காக்க அவை உதவியிருக்கின்றன. அவர்கள் மெய்யான கிறிஸ்தவர்களாக இன்னும் ஆகாவிட்டாலுங்கூட இந்த சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக நடமாட உதவியிருக்கிறது. மக்கள் இருதயத்தின் ஆழத்தில் உணராவிட்டாலுங்கூட, மெய்யாகப் பிரசங்கிக்கப்படும் பிரசங்கத்திற்கு ஏதோவொரு ஆற்றல் இருக்கிறது. பாவமானது மேற்கொள்ளப்படுவதையும், பரிசுத்தமானது உயர்த்தப்படுவதையும், கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதையும், சாத்தானின் கிரியைகள் கண்டிக்கப்படுவதையும், பரலோக ராஜ்யத்தைக் குறித்த காரியங்கள் கூறப்படுவதையும், அதன் ஆசீர்வாதங்கள் வெளிப்படுத்தப்படுவதையும் வாராவாரம், கர்த்தருடைய நாட்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருவது ஆத்துமாவுக்கு நற்பலனை அளிக்காமல் போகாது. அதன் பிறகு கலகம் விளைவிப்பதோ, தீய நெறிகளில் ஈடுபடுபவதோ அவர்களுக்குக் கடினமாக இருக்கும். பிரசங்கங்கள் மனிதனுடைய இருதயத்தை முழுவதுமாக பரிசோதிக்கச் செய்கிறது. கடவுளுடைய வாக்குத்தத்தம் நன்மையாக நிறைவேறும் விதங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் . . வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்“(ஏசா 55:11). வொயிட் பீல்ட்(ரட்ண்ற்ங் ச்ண்ங்ப்க்) என்பவர் நன்றாகச் சொன்னார், “பிரசங்கங்கள் அநேகரை நரகத்திற்குத் தப்புவிக்காவிட்டாலும், ஜெயிலுக்கும் தூக்குதண்டனைக்கும் நிச்சயமாகத் தப்புவித்துவிடும்”.

கர்த்தருடைய நாள்
இன்னொரு முக்கியமான காரியத்தையும் நான் விளக்கப் போகிறேன். கர்த்தருடைய நாளை அனுசரிக்காமலிருக்கும்படி எந்த சோதனையும் உங்களுக்கு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இதை மறுபடியும் மறுபடியும் நினைவில் வையுங்கள். கர்த்தருடைய நாளை முழுவதுமாக அவருக்கென செலவிட உறுதி கொள்ளுங்கள். கர்த்தருடைய நாளை அலட்சியப்படுத்துகிறதான ஒரு ஆவி எல்லாரிடமும் இக்காலங்களிலே வெகு வேகமாகப் பரவி வருகிறது. அதற்கு இளைஞர்களும் விதிவிலக்கல்ல. கர்த்தருடைய நாளில் உல்லாசமாக ரயிலிலும், படகுகளிலும் போய் வர ஆர்வம், ஞாயிறன்று உறவினர்கள் நண்பர்கள் சந்திப்புகள், ஞாயிறு உல்லாச பொழுது போக்குகள் − இவைகள் முன்பிருந்ததைவிட வெகு அதிகமாக யாவரிடமும் காணப்படுகிறது. வருடந்தோறும் அப்பழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஆத்துமாவுக்கு அளவிட முடியாத பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே போகிறது. இளைஞர்களே இந்த விஷயத்தில் உங்கள் உறுதியைக் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெரிய பட்டணத்தில் இருந்தாலும், சிறிய ஊரில் இருந்தாலும் கர்த்தருடைய நாளை அவருக்கென செலவிடுவேன் என்கிற உறுதியை மீறாமல் நடந்து கொள்ளுங்கள். இதற்கு எதிராக அநேக சாக்குபோக்குகளும், வாதங்களும் எழும். வாரமுழுவதும் உழைத்த உடலுக்கு ஒரு மாறுதலும் ஓய்வும் தேவை என சொல்லப்படும் வாதம் உங்கள் உறுதியைக் குலைத்துப் போடாதிருப்பதாக. உங்களை சுற்றிலும் இருக்கிறவர்கள் செய்வதும், நீங்கள் பழகுகின்ற வட்டாரங்களிலிருந்து வருகின்ற அழைப்புகளும் நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதை தடைசெய்யாதபடி கவனமாயிருங்கள் − “கர்த்தருடைய நாள் கர்த்தருக்கே உரியது. அதை அவருக்கென்றே செலவிடு“.

கர்த்தருடைய நாளை அலட்சியப்படுத்த ஆரம்பித்தீர்களானால் முடிவில் நீங்கள் உங்கள் ஆத்துமாவையே அலட்சியப்படுத்துகிறவர்களாவீர்கள். இதற்கு வருகின்ற படிகள் மிகவும் சுலபமானவைகள். அவை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக ஏற்பட்டுவிடும். கர்த்தருடைய நாளுக்குரிய மகிமையை செலுத்தாமல் போகும்போது நீங்கள் வெகுசீக்கிரத்தில் அவருடைய சபையை  அவமதிக்கிறவர்களாக ஆவீர்கள். அவருடைய சபையை மதிக்காமல் போகும்போது அவருடைய வார்த்தைகளுக்கும் மதிப்புக் கொடுக்காமல் போய்விடுவீர்கள். அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்யும் போது கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கே மரியாதை செலுத்தாதவர்களாக மாறிவிடுவீர்கள். கர்த்தருடைய நாளை அனுசரிக்காத மனிதன் பிற்பாடு கடவுளே இல்லை என்று சொல்கிற நிலமைக்கு வந்துவிட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இங்கிலாந்திலே நீதிபதியாக இருந்த ஹேல்(ஏஹப்ங்) என்கிறவர் ஒரு காரியத்தை நன்றாகச் சொன்னார்: “தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளிடம் விசாரித்துப் பார்த்ததில், கர்த்தருடைய நாளைப் புறக்கணித்து பொல்லாத வழிகளில் ஈடுபட்டதுதான் தங்களுடைய இந்த பயங்கரமான நிலமைக்கு ஆரம்பம் என்று அநேகம் கைதிகள் ஒத்துக் கொண்டார்கள்”. paraஇளைஞர்களே, கர்த்தருடைய நாளை மதிக்க மறந்துபோன மக்களின் மத்தியிலே நீங்கள் இருக்க நேரிடலாம். ஆனால் கடவுளின் உதவியைப் பெற்றுக் கொண்டவர்களாக அந்நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்பதை மறவாமலிருக்கும்படி தீர்மானம் பண்ணிக் கொள்ளுங்கள். சுவிசேஷம் சரியாகச் சொல்லப்படுகிறதான ஒரு சபையிலே தவறாமல் பங்கெடுப்பதன் மூலமாக கர்த்தருடைய நாளுக்கு கனம் செலுத்துங்கள். உண்மையான ஊழியம் நடக்கிறதான அவ்விடத்திலே தரித்திருங்கள். வாரந்தவறாமல் கர்த்தருடைய நாளிலே அங்கு செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதனால் உங்களுக்குக் கர்த்தருடைய ஆசீர்வாதம் நிச்சயமாக வந்து சேரும்: “என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப் பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்தநாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய். பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, . . .உன்னைப் போμப்பேன்“(ஏசா 58:13,14). ஒன்று நிச்சயம், நீங்கள் கர்த்தருடைய நாளைக் குறித்து எப்படி எண்ணுகிறீர்கள் என்பது, மோட்சத்திலிருக்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை பரீட்சிப்பதாக இருக்கிறது. மோட்சத்தின் முன்ருசியாகவும், வாசனையாகவும் கர்த்தருடைய நாள் இருக்கிறது. அதை ஒருவன் பாரமாகவும், முக்கியத்துவமற்றதாகவும் நினைத்தால், அவனுடைய இருதயம் மாற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது
என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

v) எங்கிருந்தாலும் ஜெபிக்கத் தவறக்கூடாது என உறுதி கொள்

இளைஞர்கள் எவ்விடத்தில் இருந்தாலும் நாள்தோறும் ஜெபிக்க வேண்டும்

மனித ஆத்துமாவின் உயிர் மூச்சாக இருக்கிறது ஜெபம். அது இல்லாதவர்கள் கடவுளின் பார்வையில் மரித்தவர்களே. நாம் உயிரோடிருப்பதாகவும், கிறிஸ்தவர்களாக இருப்பதாகவும் நமக்குத் தோன்றலாம். இரக்கத்தையும், சமாதானத்தையும் வேண்டி, கடவுளிடம் கதறி நிற்கிற உணர்வு கிருபையின் அடையாளமாகும். நம்முடைய ஆத்துமாவின் தேவைகளை அவருக்கு முன்பாக ஏறெடுக்கின்ற பழக்கம் புத்திரசுவீகார ஆவியை உடையவர்களாயிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது. நமது ஆவிக்குரிய தேவைகளுக்கு நிவாரணம் அளிப்பதே ஜெபத்தின் நோக்கமாகும். அவர் தமது பொக்கிஷங்களைத் திறக்கிறார். அவரிடமிருந்து அளவில்லாத ஆசீர்வாதங்கள் பெருகி வருகிறது. ஆசீர்வாதங்களை நாம் பெறவில்லையென்றால் அதற்குக் காரணம் நாம் கேட்காமல் இருப்பதே.

நமது இருதயங்களில் பரிசுத்தஆவியானவர் ஊற்றப்படுவதற்கு ஜெபம் வழி வகுக்கிறது. தேற்றரவாளனாகிய பரிசுத்தஆவியைத் தருவதாக இயேசுக்கிறிஸ்து வாக்குக் கொடுத்திருக்கிறார். தமது விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களோடு நம்மிடம் வருவதற்கு அவர் தயாராக இருக்கிறார் − நம்மை புதிதாக்க, பரிசுத்தப்படுத்த, சுத்தமாக்க, பெலனளிக்க, சந்தோμப்பிக்க, உற்சாகப்படுத்த, அறிவூட்ட, போதிக்க, வழிநடத்த, சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்த அவர் நம்மிடம் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறார். ஆனால் நாம் மன்றாடிக் கேட்க வேண்டுமென்பதற்காக அவர் தாமதிக்கிறார்.

ஆனால் உண்மையாக ஜெபிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே என்பதை நான் துக்கத்துடனே குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் குறைவுள்ளவர்களாகவே காணப்படுகிறார்கள். அநேகர் முழங்காலில் நின்று சில குறிப்பிட்ட வார்த்தைகளை கடவுளிடம் தெரிவிக்கலாம். ஆனால் ஜெபிப்பவர்கள் மிகவும் குறைவு. கடவுளிடம் சென்று கதறுபவர்கள் கொஞ்சமே. அவரைத் தொழுது வேண்டிக் கொள்பவர்களும் சொற்பமே. கண்டடைய வேண்டும் என்கிற விருப்பத்தோடு தேடுபவர்கள் சிலரே. பசியோடும் தாகத்தோடும் இருப்பது போலத் தட்டுபவர்கள் அதிகமானவர்கள் அல்ல. வெகு சிலரே ஜெபத்தில் போராடுகிறவர்களாயிருக்கிறார்கள். ஒரு பதிலை கடவுளிடமிருந்து எதிர்பார்த்து தொடர்ந்து முயற்சிப்பவர்கள் சிலரே. அவருக்கு ஓய்வு தராமல் கேட்பவர்கள் கொஞ்சம் பேர்தான். இடைவிடாமல் ஜெபிப்பவர்கள் வெகு சிலரே. விழித்திருந்து ஜெபிப்பவர்கள் சிலர்தான். சோர்வுறாமலும், நிறுத்தாமலும் ஜெபிப்பவர்கள் சிலரே. ஆம். சரியானபடி ஜெபிப்பவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். கிறிஸ்தவத்தில் ஜெபிப்பதும் ஒரு பாகம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதை அனுசரிப்பவர்கள் சிலரே. எல்லோரும் ஜெபிக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் அதை செயல்படுத்துகிறவர்கள் எத்தனே பேர்?

இளைஞனே, உனது ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டுமானால் நீ ஜெபிக்க வேண்டும். கடவுளுக்கு ஊமையான பிள்ளைகள் இல்லை. நீ உலகத்திற்கும், மாமிசத்திற்கும், சாத்தானுக்கும எதிர்த்து நிற்க வேண்டுமானால்(1யோவா 2:16) நீ  ஜெபிக்கிறவனாயிருக்க வேண்டும். முன்கூட்டியே பெலனைப் பெற்றுக் கொள்ளாமல், சோதனை வந்துவிட்ட பிறகு பெலனடைய நாடுவதால் பிரயோஜனமில்லை. ஒருபோதும் ஜெபித்திராதவர்களின் மத்தியிலே நீ இருக்க நேரிடலாம். கடவுளிடம் எப்போதும் எதையுமே கேட்டறியாதவர்கள் இருக்கின்ற அதே அறையிலே அவர்களுடனே நீ உறங்க நேரிடலாம். இருந்தாலும், நீ ஜெபிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு இதைக் குறித்து சில சிரமங்கள் இருக்கிறதென்று நம்புகிறேன். சந்தர்ப்பங்கள், நேரம், இடம் போன்ற சிரமங்கள் இருக்கலாம். இவைகளில் நான் எந்த கடினமான கட்டளையையும் விதிக்க மாட்டேன். நீங்கள் உங்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்படுங்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைக்கேற்ப சிந்தித்து செயல்படுங்கள். நமது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து தனித்து மலையின் மீது போய் ஜெபித்தார். ஈசாக்கு வயல்வெளிகளில் ஜெபிக்கச் சென்றார். எசேக்கியா ராஜா தனது வியாதிப் படுக்கையிலே கட்டிலின் மேல் படுத்து சுவர்ப்புறமாகத் திரும்பி ஜெபித்தார். தானியேல் ஆற்றங்கரையிலே ஜெபித்தார். பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் மேல் மாடியிலே ஜெபித்தார்கள். சில இளைஞர்கள் குதிரைகள் கட்டும் லாயத்திலும், வைக்கோற் பரண்களிலும் ஜெபித்திருக்கிறார்கள் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் உங்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது, “அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி”(மத் 6:6) என்பதின் அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் என்பதே. கடவுளோடு நீங்கள் முகமுகமாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். தினசரி அவ்வேளையிலே கடவுளோடு பேசும்படி பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கட்டாயம் ஜெபிக்க வேண்டும்.

இது இல்லாமல் எந்த புத்திமதியாலும், அறிவுரைகளாலும் பயன் ஒன்றுமில்லை. பவுல் அப்போஸ்தலன் எபேசியர் 6ஆம் அதிகாரத்தில் பட்டியலிட்டுக் காண்பிக்கிற சர்வாயுதவர்க்கத்தின் கடைசி ஆயுதம் இந்த ஜெபமாகும். இதை உண்மையோடும், அதன் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்தவர்களாக பிரயோகிக்க வேண்டும். வாழ்க்கையாகிய வனாந்தரத்திலே நீங்கள் பத்திரமாக பயணம் செய்ய வேண்டுமானால் அனுதினமும் உட்கொள்ள வேண்டிய ஆகாரமாக இது இருக்கிறது. கடவுள் இருக்கின்ற உயர்ந்த ஸ்தலத்திற்கு முன்னேறிச் செல்வதற்கு ஜெபத்தின் மூலமாக பலம் பெற வேண்டும். நான் ஒரு காரியத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இரும்பு பட்டறைகளில் வேலை செய்பவர்கள், காந்தசக்தியுள்ள ஒரு முகமூடியை அணிந்து கொள்வார்களாம். அங்கு பறக்கின்ற இரும்புத்துகள்கள் அவர்கள் உடலுக்குள் சென்றுவிடாமல் இந்த காந்தசக்தியுள்ள முகமூடி தடுத்துவிடும். அந்த துகள்கள் முகமூடியில் வந்து ஒட்டிக் கொண்டுவிடும். அந்த ஜனங்களின் ஆரோக்கியமும் பாதுக்காக்கப்படும். அது போல ஜெபமாகிய முகமூடியை நீங்கள் எப்போதும் அணிந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவ்வுலகத்தின் அசுத்தங்கள் உங்கள் ஆத்துமாவைக் கறைப்படுத்திவிடாதபடிக்கு அது தடை செய்கிறதாயிருக்கிறது. ஆகவே ஜெபிக்கத் தவறாதீர்கள்.

ஒரு மனிதன் ஜெபிக்க முழங்காலில் நின்ற நேரங்கள்தான் மிகவும் அருமையாக செலவிடப்பட்ட நேரங்களாகும். இதை மறவாதீர்கள். நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதை நினைத்துப் பாருங்கள். அவர் என்ன சொல்கிறார்? “அந்திசந்தி, மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன். அவர் என் சத்தத்தைக் கேட்பார்“(சங் 55:17). தானியேலைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். ஒரு பெரிய ராஜ்யத்தின் அலுவல்கள் யாவும் தானியேலின் கைகளில் இருந்தது. என்றாலும் தானியேல் ஒரு நாளைக்கு மூன்று முறை ஜெபிக்கத் தவறவில்லை. பொல்லாத பாபிலோனிலே தானியேல் பத்திரமாக இருந்ததன் இரகசியம் உங்களுக்குப் புரிகிறதா? சாலமோனை நினைத்துப் பாருங்கள். தனது ராஜ்யபாரத்தை நடத்துவதற்கு உதவியையும் ஞானத்தையும் ஜெபத்தின் மூலமாகக் கடவுளிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டதால் சாலமோனால் திறமையாக ஆட்சிபுரிய முடிந்தது. நெகேமியாவின் ஜெபவாழ்வு ஒரு உதாரணம். அர்த்தசஷ்டா ராஜாவின் சமூகத்திலே பணிபுரிந்து கொண்டிருக்கும்போதும் பரலோகத்தின் தேவனிடத்தில் மன்றாட அவர் நேரம் வைத்திருந்தார். இந்த தேவமனுஷர்கள் விட்டுச் சென்றிருக்கிற முன்மாதிரிகளை சிந்தித்துப் பார்த்து நீங்களும் அவர்களைப் போல செயல்படுங்கள்.

ஓ, கர்த்தர்தாமே உங்களுக்கு கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் தருவாராக. “நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதி என்று சொல். .”(எரே 3:4). நான் கூறிய மற்ற காரியங்களை நீங்கள் மறந்து போனாலும், ஜெபத்தின் அவசியத்தைக் குறித்ததான இந்த ஒரு கருத்தையாவது உங்கள் இருதயத்தில் பதித்துக் கொண்டீர்களானால் நலமாயிருக்கும்.

%d bloggers like this: