முடிவுரை
இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்
ஜெ.சி.ரைல் (1816-1900), Translation into Tamil by VS
முடிவுரை
இவைகளெல்லாம் உண்மைதானா?
நான் இப்போது முடிவுரையாக கூறப் போகிறேன். நான் கூறிய காரியங்களை ஒருவேளை அநேகர் விரும்பாமல் இருக்கலாம். அவைகளை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் நான் உங்கள் மனசாட்சியை நோக்கிக் கேட்கிறேன். நான் கூறியவைகள் யாவும் உண்மையில்லையா?
இளைஞர்களே, உங்கள் அனைவருக்கும் மனசாட்சி இருக்கிறது. பாவத்தினால் கறைபட்டு, அழிந்த நிலையில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மனசாட்சி இருக்கிறது. ஒவ்வொருவரின் இருதயத்தின் மூலையிலும் அமர்ந்து கொண்டிருக்கும் கடவுளின் சாட்சியாக அது செயல்படுகிறது. நாம் தவறு செய்யும்போது கடிந்து கொள்ளுகிறது; நாம் சரியாக நடக்கும்போது பாராட்டுகிறது. அந்த மனசாட்சியை நோக்கித்தான் நான் இன்று கேட்கிறேன், நான் கூறிய காரியங்கள் யாவும் உண்மையில்லையா?
ஆகவே இளைஞர்களே, இன்றைக்கு ஒரு பொருத்தனை செய்து கொள்ளுங்கள் − வாலிபப்பிராயத்திலே சிருஷ்டிகரை நினைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பொருத்தனைதான் அது. கிருபையின் நாட்கள் முடிவதற்கு முன்பாக − மனசாட்சியை கால்களின் கீழே தள்ளி அடிக்கடி மிதித்துப் போட்டதினால் அது செத்துப் போவதற்கு முன்னதாகவும், காலதாமதம் செய்வதினால் வயது சென்று இருதயம் கடினப்பட்டுப் போவதற்கு முன்பாகவும் − உங்களுக்கு நேரமும், பெலனும், சந்தர்ப்பங்களும் இருக்கும்போதே கர்த்தருடனே நித்திய உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள். ஆவியானவர் என்றென்றைக்கும் உங்களுடனே போராடிக் கொண்டேயிருக்க மாட்டார். மனசாட்சியின் சத்தத்தை நீங்கள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேயிருந்தால், அந்த சத்தம் மங்கி, மறைந்து போய்விடும். அத்தேனே பட்டணத்தார் பவுலிடம், “நீ சொல்லுகிறதை இன்னொரு வேளை கேட்போம் என்றார்கள்”(அப் 17:32). ஆனால், பவுல் பேசுவதைக் கேட்க இன்னொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படவேயில்லை. துரிதமாக செயல்படுங்கள். தாமதிக்காதிருங்கள். இனிமேலும் தயங்காதிருங்கள்
மற்றவர்களுக்கு ஆறுதல் அளியுங்கள்
எனது ஆலோசனையின்படி நீங்கள் நடந்தால், பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் அளிக்கக்கூடிய சொல்லிமுடியாத ஆறுதலைக் குறித்து எண்ணிப் பாருங்கள். அவர்கள் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும், சரீரபெலனையும் உங்களுக்காக செலவிட்டு, உங்களை இந்த நிலமைக்கு ஆளாக்கியிருப்பதை நினைத்துப் பாருங்கள். உங்களிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்க்கும் உரிமை அவர்களுக்கு இருப்பது உண்மைதான். வாலிபர்கள் சந்தர்ப்பங்களை தங்களுக்குக் கீழ்ப்படுத்துவதால் ஏற்படக்கூடிய சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் யாரால் கணக்கிடக்கூடும்? ஏசா(ஆதி 25−27), ஒப்னி, பினகாஸ் (1சாமு 1−4), அப்சலோம்(2சாமு 13) இவர்களைப் போன்ற வாலிபர்கள் மற்றவர்களுக்கு விளைவிக்கும் துயரத்தையும் வருத்தத்தையும் குறித்து யாரால் விளக்க முடியும்? ஞானியாகிய சாலமோன் மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார்: “ஞானமுள்ள மகன் தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான். மூடத்தனமுள்ளவனோ தாய்க்கு சஞ்சலமாயிருக்கிறான்”(நீதி 10:1). ஓ, வாலிபர்களே, இவைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து, உங்கள் இருதயத்தை கடவுளுக்கு ஒப்புக் கொடுங்கள். “உனது வாலிபநாட்கள் முட்டாள்தனமானவை, உனது வாழ்க்கையானது போராட்டம் நிறைந்தது, உன் முதிர்வயது வருந்தத்தக்கது” என்று அநேகரைக் குறித்து சொல்லப்பட்டது போல உங்களைக் குறித்தும் சொல்லப்படாமல் இருப்பதாக.
நன்மை செய்யக் கூடிய ஆயுதங்களாயிருங்கள்
உலகத்திற்கு நன்மை செய்யக்கூடிய கருவிகாளாக நீங்கள் செயல்பட முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள். கடவுளின் பரிசுத்தவான்களில் ஏறக்குறைய எல்லாருமே கர்த்தரை தங்களுடைய வாலிப நாட்களில் தேடிக் கண்டடைந்தவர்கள்தான். மோசே, சாமுவேல், தாவீது, தானியேல் போன்றவர்கள் தங்களுடைய வாலிப நாட்கள் முதலே கர்த்தருக்கு சேவை செய்தவர்கள். நமது இளம் ராஜாவாகிய ஆறாம் எட்வர்ட்டை தேவன் எவ்வளவு கனப்படுத்தியிருக்கிறார் என்பதையும் நினைத்துப் பாருங்கள். வாலிபர்கள் தங்கள் வாழ்வின் வசந்த காலங்களை தேவனுக்கு அர்ப்பணித்தால் தேவன் அவர்களை நிச்சயமாகவே ஆசீர்வதிப்பார் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. பெரிதான நற்காரியங்களை செய்வதற்கு பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள். சத்தியத்தை பரப்புவதற்கு வேண்டிய எல்லா கருவிகளும் நிரம்பி இருக்கின்றன. ஆனால் அவைகளை எடுத்து செயல்படுத்தக் கூடிய கரங்களைத்தான் தேட வேண்டியதாக இருக்கிறது. நற்காரியங்களை செய்வதற்கு தேவையான பொருளுதவிகளை எளிதில் பெற்றுவிடலாம் − ஆனால் அவைகளை செய்யக் கூடிய மனிதர்கள் சொற்பமாக இருக்கிறார்கள். புதிதாக தோற்றுவிக்கப்படும் சபைகளில் ஊழியம் செய்ய ஊழியர்கள் தேவையாக இருக்கிறார்கள். புதிய ஸ்தலங்களில் சத்தியத்தை அறிவிக்க சுவிசேஷகர்கள் தேவைப்படுகிறார்கள். கவனிக்கப்படாத பிரதேசங்களில் சென்று வர ஆட்கள் தேவைப்படுகிறார்கள். புதிய பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வேண்டியதாயிருக்கிறது. தேவையான பிரதிநிதிகள் இல்லாதபடியினால் அநேக நற்காரியங்கள் செயல்படுத்த முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. நான் மேலே குறிப்பிட்ட வேலைகளை செய்வதற்கு பக்தியும், உண்மையும் உள்ள நம்பகமான மனிதர்களின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது.
இன்றைக்கு இருக்கிற வாலிபர்களே, கடவுளுக்கு நீங்கள் மிகவும் தேவையாக இருக்கிறீர்கள். இக்காலங்களில் நாம் மிகவும் செயல்படக் கூடியவர்களாக வேண்டும். நாம் நமது சுயநலங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு செயலாற்ற வேண்டும். முன்னோர்களைப் போல, மற்றவர்களைக் குறித்து அக்கறையில்லாமல் இருக்கிறதான சோம்பலின் உறக்கத்தை மனிதர்கள் நீக்கிப் போடுகின்ற காலம் இது. “நான் என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என காயீனைப் போல நினைப்பதைக் குறித்து மனிதர்கள் வெட்கப்பட ஆரம்பித்திருக்கின்றனர். உங்களுக்கு விருப்பம் இருந்தால், பிறருக்கு உதவியாக இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அநேகம் உங்கள் முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. அறுப்போ மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் (லூக் 10:2). நற்காரியங்களை செய்வதற்கு ஆர்வமாயிருங்கள். கர்த்தருக்காக நற்காரியங்கள் செய்வதற்கு வாருங்கள். “நல்லவர்களாயிருப்பது மாத்திரமல்ல, நன்மை செய்கிறவர்களுமாயிருப்பது” (சங் 119:68) ஒருவகையில் கர்த்தருக்கு ஒத்த குணமாகும். இது, உங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுக்கிறிஸ்துவின் நடைகளை பின்பற்றும் வழியாகும்: “அவர் நன்மை செய்கிறவராயும் . . சுற்றித் திரிந்தார்”(அப் 10:38). இதுவே, “தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியம் செய்த” வாழ்க்கையாகும் (அப் 13:36).
அழியாத ஆத்துமாவைப் பெற்றுக் கொள்கிறவர்கள் போகின்ற பாதை இதுதான் என்பதைக் குறித்து யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடுமா? இந்த உலகத்தை விட்டுப் போகையிலே யோசியா ராஜாவைப் போல நற்பெயரோடு போக விரும்பாதவர்கள் யாரும் இருக்கக்கூடுமோ? அவனுடைய பிரிவைக் குறித்து மகா பெரிய புலம்பல் இஸ்ரவேலிலே காணப்பட்டதை 2நாளா 35:24−27ல் வாசிக்கிறோம். இதற்கு நேர்மாறானவனாக இவ்வுலகத்தை விட்டுப் போனவன் யோராம் என்கிற ராஜா. அவன் “விரும்புவாரில்லாமல் இறந்து போனான்” (2நாளா 21:20). நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து முடிக்க விரும்புகிறீர்கள்? சோம்பேறியாகவும், அற்பத்தனமாகவும், இம்மண்ணில் உபயோகமற்றவர்களாகவும், உங்கள் சரீரத்துக்காகவும், சுயநலத்துக்காகவும், ஆசை இச்சைகளுக்காகவும், பெருமைக்காகவும் வாழ்ந்து முடிப்பது மேலானதா? அல்லது சகமனிதர்களுக்காக உங்களுடைய சகலமும் செலவிடப்படத்தக்க வகையில் வாழ்ந்து முடிப்பது சிறப்பா? வில்பர் ஃபோர்ஸ் (ஜ்ண்ப்க்ஷங்ழ்ச்ர்ழ்ஸ்ரீங். 1759−1833. இவர் சமூக சேவை செய்த ஆங்கிலேய அரசியல்வாதி. அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடியவர். நாடாளுமன்றத்தில் அடிமைத்தனம் கூடாது என்கிற சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இறந்து போனார். ), ஷாப்டஸ்பரி பிரபு (நட்ஹச்ற்ங்ள்க்ஷன்ழ்ஹ் – 1801−1885 இவர் தேவபக்தி நிறைந்த மனிதர். இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்த மனிதாபிமானமற்ற பழக்கவழக்கங்களை மாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.) இவர்கள் நமது தேசத்துக்கும் உலகுக்கும் பிரயோஜனமாக வாழ்ந்தது போல வாழ விரும்புங்கள். சிறைச்சாலைகளில் இருக்கிறவர்களின் மத்தியிலே நண்பராக ஊழியம் செய்த ஹோவர்ட் (ஏர்ஜ்ஹழ்க் – (1726 − 1790) ஆங்கிலேய அரசியல்வாதியும் வழக்கறிஞருமான இவர் சிறைச்சாலைகளின் முறைகளை சீர்திருத்தியவர். சிறைச்சாலைகளில் செயல்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி, சிறைவாசத்தை சீர்திருத்தியவர்.) அவரைப் போல வாழ விரும்புங்கள். விக்கிரக வழிபாடுகள் நடக்கும் ஸ்தலங்களிலே சென்று தகப்பனைப் போல வழிநடத்தி அநேகரை அழியாத ஆத்துமாவைப் பெற்றுக் கொள்ள உதவின ஸ்வார்ட்ஷ் (Schwartz – 1726−1798 ஜெர்மன் தேசத்து ஊழியர். இவர் இந்தியாவின் தென்பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். இவர்
மூலமாக அநேக பள்ளிகளும், சபைகளும் உருவாயின. ) இவரை மாதிரியாக நோக்குங்கள். ராபர்ட் மெக்னே(Robert M’Cheyne – 1813−1843 ஸ்காட்லாந்து தேசத்தைச் சேர்ந்த பாதிரியார். இவர் 9ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தேவபக்தியுள்ள மனிதர்.) இந்த தேவபக்தி நிறைந்த மனிதர் கிறிஸ்துவுக்காக வெளிச்சமாகவும், கிறிஸ்துவின் நிருபமாக எல்லாராலும் அறியப்படத்தக்க வகையில் வாழ்ந்ததை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்கிற மனிதர்களின் மத்தியிலே நீங்கள் இப்படிப்பட்டவர்களாக வாழ்ந்தால் யார் உங்களை ஒரு நொடியாவது சந்தேகிப்பார்கள்?
paraஇளைஞர்களே, உங்கள் பொறுப்புகளை எண்ணிப் பாருங்கள். நன்மை செய்வதால் விளையக்கூடிய சலுகைகளையும் வாய்ப்புகளையும் எண்ணிப் பாருங்கள். இந்த நாளில் உபயோகமாக செயல்பட வேண்டுமென தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தை உடனடியாக கிறிஸ்துவிடம் ஒப்புவியுங்கள்.
உங்கள் ஆத்துமத்தில் ஏற்படக்கூடிய சந்தோஷம்
நீங்கள் கடவுளுக்கு தொண்டாற்றுவதால் உங்கள் ஆத்துமாவுக்கே வரக்கூடிய சந்தோஷங்களை எண்ணிப் பாருங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைப் பாதையிலே பயணிக்கையில் ஏற்படுகின்ற சந்தோஷங்கள், பயணம் முடிவு பெறுகையில் ஏற்படக்கூடிய சந்தோஷங்கள் − யாவும் கடவுளுக்கு ஊழியம் செய்வதால் ஏற்படுகிறது. நீங்கள் பலவிதமான வீணான கருத்துக்களை கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் நான் கூறுவதை நம்புங்கள்: நீதிமானுக்கான வெகுமதிகள் இந்த உலகத்திலும் கிடைக்கிறது. தேவபக்தியுள்ள வாழ்க்கைக்குரிய ஆசீர்வாதங்கள் இந்த உலகத்திற்கும் பரலோகத்திற்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. கடவுள் உனது நண்பராயிருக்கிறார் என்கிற உணர்வு மெய்யான சமாதானத்தைத் தருகிறது. நீ எவ்வளவுதான் தகுதியற்றவனாக இருந்தாலும், கிறிஸ்துவுக்குள் நீ பூரணமாயிருக்கிறாய் என்பதை அறியும்போது அது உனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது. நிரந்தரமான ஒரு பங்கை நீ பெற்றிருக்கிறாய்; உன்னிடத்திலிருந்து எடுபட முடியாத பங்கை நீ அடைந்திருக்கிறாய் என்பது மிகுந்த திருப்தியை அளிக்கிறது. paraபின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலே திருப்தியாவான். ஆனால் “நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்” (நீதி 14:14). உலக மனுஷனுடைய பாதை அவன் வாழ்நாளில் இருண்டுகொண்டே போகிறது. ஆனால் கிறிஸ்தவனின் பாதையோ மின்னுகிற விளக்காக, முடிவுமட்டும் பிரகாசத்தின் மேல் பிரகாசம் அடைந்து கொண்டே போகும். உலகத்தாரின் சூரியன் நிரந்தரமாக அஸ்தமிக்கிற வேளையிலே
கிறிஸ்தவனின் சூரியன் உதயமாகி பிரகாசிக்கும்; உலகத்தாரின் சிறப்பெல்லாம் அவனது கைகளை விட்டு நழுவி மறையத் தொடங்குகிற சமயத்திலே, கிறிஸ்தவனின் சிறப்பு மலரத் தொடங்கி, என்றென்றுமாய் வாடாமல் இருக்கத் தொடங்குகிறது.
இளைஞர்களே, இவைகளெல்லாம் மெய்யான உண்மைகள். புத்திமதிகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அவைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். சிலுவையை எடுத்துக் கொள்ளுங்கள். கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள். உங்களை கடவுளுக்கு ஒப்புவியுங்கள்!